மேலும்

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பாதிப்பு இல்லை- சிறிலங்கா காவல்துறை

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

”ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதானது, அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதிலோ அல்லது, அது தொடர்பான விசாரணைகளிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தற்போது, அவசரகால சட்டத்தின் கீழ் எந்த சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்படவில்லை.

அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர், தடை செய்யப்பட்ட மூன்று இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளின் கீழ் அரசிதழில் அறிவிக்கப்பட்ட முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவதற்கும், நிகாப், புர்கா போன்ற முகத்தை மூடி அணியும் ஆடைகளை அணிவதற்கும் விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.” என்று தெரிவித்தார்.

இராணுவத்தை பணியில் ஈடுபடுத்துவது குறித்து விரைவில் கொள்கை முடிவு

அவசரகாலச் சட்ட விதிகள் நடைமுறையில் இல்லாத நிலையில், இராணுவத்தினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இராணுவத்தை பணியில் அமர்த்தும் தேவை ஏற்பட்டால், அதனை செய்வதற்கு அவசரகாலச் சட்டத்துக்கு புறம்பாக, வேறு பல சட்ட விதிகளும் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *