பலாலியில் இருந்து விமான சேவை – அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம் அனுமதி
பலாலி விமான நிலையத்தில் இருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம் (IATA) அனுமதி அளித்துள்ளது சிறிலங்கா சிவில் விமான சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்தமாதம். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தநிலையில், வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை பலாலி விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்வதற்கு, அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்திடம் (IATA) சிறிலங்கா அரசாங்கம் அனுமதி பெற்றுள்ளது.
பலாலி விமான நிலையத்தில் இருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு, அனுமதி அளித்துள்ள அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம், பலாலி விமான நிலையத்துக்கான தனித்துவமான குறியீட்டான JAF என்பதையும், (IATA code JAF) வழங்கியுள்ளது.
பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை விமான நிலையம் என்றே அனைத்துலக விமான சேவைப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளது.