மேலும்

அவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. 

அவசரகாலச்சட்டத்தை நீடித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழுக்கு அனுமதி அளிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் அதனை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவாதத்தை அடுத்து நேற்று மாலை சபையில் வாக்கெடுப்பு நடத்துமாறு, கூட்டமைப்பின் உறுப்பினர் சிறிதரன் கோரினார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 2 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் 40 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தனர்.

கூட்டமைப்பின்  ஏனைய உறுப்பினர்கள், ஜேவிபி உள்ளிட் கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *