மேலும்

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் ஆக அதிகரிப்பு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த 21ஆம் நாள் இரவு தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை கொட்டிய, பெருமழையினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களும், கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன.

மழை வெள்ளத்தினாலும், குளங்கள் நிரம்பியதாலும், குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதாலும், பெருமளவு கிராமங்கள், மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் தன்னார்வ குழுக்களினால் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் 13,646 குடும்பங்களைச் சேர்ந்த 44,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியிருந்தது.

எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

வெள்ளத்தினால் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த, மற்றும் மீட்கப்பட்ட மக்கள் 53 இடைக்கால நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக இடர்முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் அத்துல கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

வெள்ளம் குறைந்து வருவதாகவும், 150 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும், வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா இராணுவம் சுமார் 1000 படையினரையும், சிறிலங்கா கடற்படை 9 டிங்கி படகுகளுடன் ஆறு நிவாரணங் குழுக்களையும், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளன.

சிறிலங்கா விமானப்படை பெல்- உலங்குவானூர்தி ஒன்றையும், வை-12 விமானம் ஒன்றையும்,  இரணைமடு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளின் வெள்ளநிலைமைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

இதற்கிடையே, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் நிவாரணப்பணிகளுக்காக சிறிலங்கா அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *