மாணவர்களுக்கு டப்லட் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்
உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டப்லெட் கணினிகளை வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.
உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 160,000 மாணவர்களுக்கும், 36,000 ஆசிரியர்களும் டப்லெட் கணினிகளை வழங்கப் போவதாக கடந்த ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், இந்தத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை நேற்று முடிவெடுத்தது.
இந்தத் திட்டத்துக்காகத் தேவைப்படும் 4 பில்லியன் ரூபா நிதியை வேறு கூடிய பயனுள்ள திட்டத்துக்கு செலவிடும் நோக்கிலேயே இதனை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த திட்டத்தை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ், தலா 27 ஆயிரம் ரூபா பெறுமதியான டப்லெட் கணினிகளை 160,000 மாணவர்களுக்கும், 36,000 ஆசிரியர்களும் வழங்குவதற்கான வழங்குனரை சிறிலங்கா அமைச்சரவை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.