இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்
மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும், முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் என்பன குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, இந்த சிறப்பு அமர்வுக்காக நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் விவாதம், மாலை 4 மணி வரை தொடரும் என்றும், அதன் பின்னர் நாடாளுமன்றம் பெப்ரவரி 20ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்படும் என்றும் நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 20ஆம் , 21ஆம் நாள்களிலும் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதால் இன்றைய அமர்வில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மனோ கணேசனின் கட்சியும் அறிவித்துள்ளன.
குறைந்தளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களே இன்றைய அமர்வில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இன்றைய அமர்வில் கூட்டு எதிரணியினர் பெரும் பிரச்சினையை எழுப்புவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.