மேலும்

தேர்தலுக்குப் பின் மேற்பார்வை அரசு – ரணிலை கவிழ்க்க சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் திட்டம்

SLFPபுதிய பிரதமர் தலைமையிலான மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு முடிவு செய்துள்ளது.

அடுத்த அதிபர் தேர்தல் வரைக்கும் இந்த மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனையை இந்த அமைச்சர்கள் முன்வைக்கவுள்ளனர்.

இதுதொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னர், இந்த மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை தாம் சிறிலங்கா அதிபரிடம் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையில் சிறிலங்கா பிரதமர் மற்றும் ஐதேக அமைச்சர்கள் பலருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைப்பதே விவேகமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இதுகுறித்தும் தாம் சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை, பதுளையில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையையும் நியமிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் தாம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், மேர்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறும் தாம் கேட்கவுள்ளதாகவும், நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு மேர்பார்வை அரசாங்கம் ஒன்று அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *