சிறிலங்கன், மிகின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு நியமனம்
சிறிலங்கன் விமான சேவை, மிகின் லங்கா விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவை அமைக்கும் அரசிதழ் அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டார்.
மேற்படி இரண்டு நிறுவனங்களிலும், 2006 ஜனவரி 1ஆம் நாளுக்கும், 2018 ஜனவரி 31ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள் குறித்து, ஐந்து பேர் கொண்ட இந்த ஆணைக்குழுவுக்கு, அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசிதழ் அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி காமினி றொகான் அமரசேகர, மேல்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பியசேன ரணசிங்க, முன்னாள் பிரதி கணக்காய்வாளர் நாயகம் மல்லவாராச்சி டொன் அன்ரனி ஹெரால்ட், சிறிலங்கா கணக்காய்வு தர கண்காணிப்பு சபையின் பணிப்பாளர் வசந்த ஜெயசீலி கபுகம ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.