சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் இருந்து ஒதுங்குகிறார் சம்பந்தன்
சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் நாளை காலை சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
பிரித்தானிய இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
எனினும், சுதந்திர நாள் விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேறு பிரதிநிதிகளோ பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளதால், சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாதிருப்பதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக வெளியான செய்திகளை, கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.
தேர்தல் பரப்புரைகள் காரணமாகவே நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.