மேலும்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் புதிய பிரதமர் – வெளியேற்றப்படுவாராம் ரணில்

dilan pereraஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற்றும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போதைய சூழ்நிலையில், பெப்ரவரி 10ஆம் நாள் தேர்தல்கள் முடிந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

ஐதேகவுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால், இந்த நகர்வு சாத்தியமாகும். ஐதேகவுக்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கிடைத்தால், இந்த நோக்கம் சாத்தியப்படாது.

எனவே, வாக்காளர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் தான், புதிய பிரதமரை சிறிலங்கா அதிபரால் நியமிக்க முடியும்.

உள்ளூராட்சித் தேர்தல்10ஆம் நாள் முடிந்த பின்னர், இந்த கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பதா இல்லையா என்பதை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முடிவு செய்யும்.

ஆனால், சிறிலங்கா அதிபர் நிச்சயமாக, பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிப்பதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும், இடமளிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *