கோத்தாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்க நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்சவை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்தநிலையில், தம்மைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக், பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ், டிசெம்பர் 6ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதி காவல்துறை மா அதிபர், சட்டமாஅதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.