மகிந்த – மைத்திரி அணிகளை இணைக்கும் பேச்சு தோல்வி
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக மகிந்த அணியினருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று நடத்திய பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் தனித்துப் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் மகிந்த ராஜபக்ச அணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் அவர்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தி வேட்புமனுவுக்கான விண்ணப்பங்களையும் பெற்றுள்ளனர்.
அதேவேளை, மகிந்த அணியினரையும் இணைத்து உள்ளராட்சித் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே நடத்தப்பட்ட முதல்சுற்று பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் நேற்று மீண்டும் ஒரு பேச்சு நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்தப் பேச்சுக்கு கூட்டு எதிரணி தரப்பில் தலைமை தாங்கிய மகிந்த யாப்பா அபேவர்த்தன, அடுத்த சுற்றுப் பேச்சுக்களை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.