கைது பயத்தில் கோத்தா – தடுக்குமாறு நீதிமன்றில் அடைக்கலம்
தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
பாதுகாப்புச் செயலராக பதவியில் இருந்த போது அரசாங்க நிதியை மோசடி செய்து தமது பெற்றோருக்கு நினைவுச் சின்னம் அமைத்தார் என்ற குற்றச்சாட்டில், கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே, தம்மைக் கைது செய்வதற்கு தடைவிதிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றில் கோத்தாபய ராஜபக்ச மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 22ஆம் நாள் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும், சிறிலங்கா அதிபரின் தலையீட்டினால் அந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.