வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் புதிய சாதனை
அடுத்த ஆண்டில் 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறிலங்கா முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்க, இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில்,
இந்த ஆண்டு 1 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், 1.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற முடியும் என்று கூறினார்.
எனினும், இந்த ஆண்டு முதலீடுகள் மேற்கொண்ட பிரதான நாடுகள் பற்றிய விபரத்தையோ, எவ்வாறு 500 மில்லியன் டொலர் நிதியை வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்குள் பெற்றுக் கொள்ள முடியும் என்ற விபரத்தையோ அவர் வெளியிடவில்லை.
ஒரே ஆண்டில், அதிகபட்ச வெளிநாட்டு முதலீடு பெற்றுக் கொள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
2012ஆம் ஆண்டு 941 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு திரட்டப்பட்டதே, ஒரு ஆண்டின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது.
2016 ஆம் ஆண்டில், 898 மில்லியன் டொலரும், 2015ஆம் ஆண்டு 680 மில்லியன் டொலரும், வெளிநாட்டு நேரடி முதலீடாகப் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.