அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 197 அகதிகளை கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை
அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,
“சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று அங்கு புகலிடம் நிராகரிக்கப்பட்ட 197 இலங்கையர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவா நியூகினியாவில் 21 பேரும், அவுஸ்ரேலியாவில் 70 பேரும், நௌருவில் 94 பேருமாக, மொத்தம் 197 இலங்கையர்கள் அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ளனர்.
அவுஸ்ரேலிய குடியுரிமைக்கு தகைமைபெறாத – தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீண்டும் சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவர்கள் இலங்கையர்கள் என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.