எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதாக மைத்திரியிடம் மோடி வாக்குறுதி – கப்பலை அனுப்பினார்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று மாலை இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக இந்திய தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசிய உரையாடலின் போது, 21 ஆயிரம் கிலோ லீற்றர் பெற்றோலுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் இன்று கொழும்பு வந்து சேரும். மேலும் தேவைப்படும் பெற்றோலை கொச்சியில் இருந்து அனுப்பி வைப்பதாகவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள 3500 கிலோ லீற்றர் பெற்றோலை உடனடியாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குமாறும் இந்தியப்பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.