அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று பிற்பகல் 3 மணியளவில், நாடாளுமன்றத்தில அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.
நிதியமைச்சராகப் பதவியேற்ற பின்னர், மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
வரவுசெலவுத் திட்ட முதலாவது வாசிப்பாக, நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, கடந்த மாதம் 9ஆம் நாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தநிலையில் இரண்டாவது வாசிப்பாக, வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம், நொவம்பர் 16ஆம் நாள் வரை இடம்பெறும்.
வரும் 16ஆம் நாள் மாலை இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நொவம்பர் 17ஆம் நாள் தொடக்கம், டிசெம்பர் 09ஆம்நாள் நடத்தப்படும் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தை தொடர்ந்து, டிசெம்பர் 09ஆம்நாள் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு அமைய, 2018ஆம் ஆண்டுக்கான அரசாங்க செலவுகள் 3, 982 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரச வருமானம் 2,175ரூபாவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 1,807 பில்லியன் ரூபா பற்றாக்குறையை எவ்வாறு ஈடு செய்வது என்பது பற்றி இன்றைய வரவுசெலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிடுவார்.