அரியாலை படுகொலை – இரண்டு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கைது
அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் பணியாற்றும், உதவி ஆய்வாளர் மல்லவாராச்சி பிரதீப் நிசாந்த, கொன்ஸ்டபிள் ரத்நாயக்க முதியான்சலாகே இந்திக புஷ்ப குமார ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த மாதம் 22 ஆம் நாள், மணியம்தோட்டம் பகுதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற 24 வயதுடைய இளைஞன், மற்றொரு உந்துருளியில் சென்ற நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, முச்சக்கர வண்டி, உந்துருளி என்பனவற்றைக் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,