சிறிலங்கா அதிபரை முதல்முறையாகச் சந்தித்த சிறிலங்கா கடற்படைத் தளபதி
சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை முதல் முறையாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சிறிலங்காவின் 22 ஆவது கடற்படைத் தளபதியாக, வைஸ் அட்மிரல் ரணசிங்க கடந்த, 26ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளும், சிறிலங்கா அதிபரின் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொள்வது வழக்கமாகும்.
எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கட்டாருக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதே, கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க பதவியேற்றார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை, சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவே வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பதவியேற்றுக் கொண்ட பின்னர் வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க முதல் முறையாக நேற்று அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடினார்.