கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல்
பாரிய உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல் உள்ளிட்ட ஜப்பானிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
ஜப்பானிய கடற்படையின் 248 மீற்றர் நீளம் கொண்ட இசுமோ என்ற உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பலும், 151 மீற்றர் நீளம் கொண்ட சசனாமி என்ற போர்க்கப்பலுமே கொழும்பு வந்துள்ளன.
இசுமோ என்ற உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பலில் 970 கடற்படையினரும், சசனாமி என்ற போர்க்கப்பலில், 175 கடற்படையினரும் பணியாற்றுகின்றனர்.
இந்திய- அமெரிக்க கடற்படைகளுடனான மலபார் கூட்டுப் பயிற்சிக்காக வங்காள விரிகுடாவுக்கு வந்திருந்த இந்தக் கப்பல்கள் மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளன.
வரும் 23ஆம் நாள் வரை கொழும்பில் தரித்திருக்கும் இந்தக் கப்பல்களில் உள்ள ஜப்பானிய கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு பயிற்சிகள் உள்ளிட்ட கூட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இசுமோ என்ற உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல், 9 உலங்குவானூர்திகள் நிரந்தரமாகத் தரித்து நிற்கும் வசதிகளைக் கொண்டது. அதேவேளை அதிகபட்சமாக 28 உலங்குவானூர்திகளை நிறுத்தும் வசதிகள் இதில் இருக்கின்றன.