பொருத்து வீட்டுத்திட்டத் திட்ட உடன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றில் மனு
வடக்கு, கிழக்கில் உலோகத்தினால் ஆன பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பாக, பிரெஞ்சு நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு உடன்பாட்டையும் செய்து கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார்.
வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் உலோக- பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை செயற்படுத்த சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையிலேயே இதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,
இந்த திட்டம் தொடர்பாக பிரெஞ்சு நிறுவனத்துடன், அமைச்சர் சுவாமிநாதன் எந்த உடன்பாட்டுக்கும் செல்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு, இந்த அடிப்படை உரிமை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவில், அமைச்சர் சுவாமிநாதன், பிரென்சின் ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உலோக பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கின் சூற்றாடலுக்கு பொருந்தக் கூடியது அல்ல என்றும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துதனால், உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், 2016 செப்ரெம்பர் 27ஆம் நாள் நடந்த யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஒருமனதாக நிராகரிக்கப்பட்டது என்றும் சுமந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.