அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்
மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் ஜூலை 10ஆம் நாள் தொடக்கம், 14 ஆம் நாள் வரையான ஐந்து நாட்கள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்காவில் தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை மற்றும் சட்ட வரையறை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும், தான் எதிர்பார்த்திருப்பதாக பெண் எமர்சன் தெரிவித்துள்ளார்.
இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்ட பிரதிநிதிகள், வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வுக்குப் பொறுப்பான அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளையும், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
தீவிரவாத குற்றங்கள் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் அல்லது தண்டனை விதிக்கப்பட்டுவர்களைச் சந்திக்க, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும பென் எமர்சன் செல்லவுள்ளார்.
அனுராதபுர, வவுனியா உள்ளிட்ட இடங்களுக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.