சிறிலங்காவின் நீதிப்பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு முக்கியம் – ஐ.நா பொதுச்செயலர்
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைய , நம்பகமான நீதிச் செயல்முறை மற்றும் நீதிப் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு என்பன முக்கியம் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான கருத்து நியூயோர்க்கில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்,
“சிறிலங்காவில் இடைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பாக கலந்துரையாடப்படுவதை, ஐ.நா பொதுச்செயலர் புரிந்து கொண்டுள்ளார். பரந்துபட்ட அளவில் தேசிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பொறிமுறையை வடிவமைப்பதற்கு உதவியாக அமையும்.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைய, நம்பகமான நீதிச் செயல்முறை மற்றும் நீதிப் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு என்பன முக்கியம் என்று ஐ.நா பொதுச் செயலர் வலியுறுத்தியிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம் தனது கடப்பாடு மற்றும் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில், உறுதியாக இருக்கும் என்று ஐ.நா பொதுச்செயலர் நம்புகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.