போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டை நிராகரிக்க முடியாது – ரணில்
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில், அனைத்துலகத் தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பி்ரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமில்லை என்று கடந்தவாரம் சிறிலங்கா அதிபர் கூறியிருப்பது தொடர்பாக சனல் 4 எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டுத் தலையீட்டை நிராகரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் ‘ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எமது அரசாங்கம் உறுதி பூண்டிருக்கிறது.
பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை எதிர்வரும் மே மாதம் உருவாக்கப்படும்.
போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சந்தேகங்கள் உள்ளன. சரியான எண்ணிக்கையைக் கண்டறிவதில் நாம் ஆர்வம் கொண்டிருக்கிறோம்.
போருக்குப் பின்னரும் பலர் காணாமற்போயுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் இறந்து போயிருக்கலாம்.
அவர்கள் எவ்வாறு இறந்தனர், என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.