ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – சம்பந்தன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜெப் டொஜ், நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் செலயகத்தில்இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு மாற்றம், நல்லிணக்கம், ஐ.நா தீர்மானம், தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்புக்கள் உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இச்சந்திப்பில் தாம் வலியுறுத்திய விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன்,
“பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலக முடியாது. அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நீண்டகால தேசிய பிரச்சினைக்கான தீர்வானது புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியது அவசியம். அந்த தீர்வானது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக அமைய வேண்டும்.
நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் சிறிலங்காவுக்கு அவசியமானது” என்று குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்க தூதுவர்,
“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்கின்றோம்.
தென்னாபிரிக்கா அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக எந்த வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளது என்றார்.
ஜெனிவாவில் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் ஆள் வைத்து தடுத்து போட்டு இப்ப என்ன பாசாங்கு நாடகம்