மேலும்

விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தத்தை தோற்கடிப்போம் – மைத்திரி சூளுரை

maithriவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்தைத் தோற்கடிக்கும் நடவடிக்கையிலேயே தமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போரில் உடல்திறன் இழந்த சிறிலங்கா படையினருக்குச் சிகிச்சை அளிப்பதற்கான நீச்சல் தடாகத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் 2009 மே மாதம் 19 ஆம்  நாள் போர்க்களத்தில்  ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டது.

ஆயுதரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதும் தமிழீழத்தை உருவாக்குவதற்கான விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளை கருத்து ரீதியாக -அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டும். இது மிகவும் நெருக்கடியான பிரச்சினை இதனை புத்திக்கூர்மையுடன் அணுகி வெற்றிக் கொள்ள வேண்டும்.

இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை அரசியல் சித்தாந்த ரீதியில் தோற்கடிக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு புதிய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தான்,  நாட்டின் தேசியப் பாதுகாப்பை பலவீனமடையச் செய்து, இராணுவத்தினரின் மன வலிமையை இல்லாமல் செய்வதற்கு அரசு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

இவர்கள் “தேசிய பாதுகாப்பை” தமது அரசியலின் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர்.  இவர்களுக்கு உண்மையிலேயே நாட்டின் மீது “பற்று” கிடையாது. மாறாக அரசியல் இலாபமே அவர்களுக்கு இருக்கின்றது.

புதிய அரசாங்கம் ஒருபோதும் தேசிய பாதுகாப்பிற்கான தனது கடப்பாட்டை கைவிடுவதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

கடந்த காலங்களை விட தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் காணும் கனவான தமிழீழக் கோரிக்கை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

அந்தக் கனவை தகர்த்தெறிவதற்காக அனைத்துலகத்தின் முழுமையான ஒத்துழைப்புகளும் இன்று சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளது.

போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் சில சம்பவங்கள் காரணமாக சிறிலங்கா படையினருக்கு வெளிநாடுகளில் வழங்கப்பட்ட பயிற்சிகளும், தொழில்நுட்ப உதவிகளும் நிறுத்தப்பட்டன.

நான் அதிபரான பின்னர் அந்தநாட்டு தலைவர்களை சந்தித்து தற்போதைய நல்லாட்சி தொடர்பாக தெளிவுபடுத்திய பின்னர்,  உலக நாடுகள் மீண்டும் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளன.

வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு சிறிலங்கா படையினரை மீளமைப்புச் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

வெளிநாடுகளுக்கு தேவையான விதத்தில் எமது படையினர் மீளமைப்புக்கு உள்ளாக்கப்படமாட்டார்கள்.

இது தொடர்பில் எந்தவொரு வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் நாம் அடி பணியவில்லை.  எந்தவொரு நாடும் எமக்கு ஆலோசனைகளை வழங்கவும் இல்லை. அதனை ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவும் இல்லை.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *