உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க முதல்முறையாக சிறிலங்காவுக்கு அழைப்பு
ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின், 2016ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சுவிற்சர்லாந்து செல்லவுள்ளார். இந்த மாநாடு சுவிற்சர்லாந்தின், டாவோஸ் நகரில் வரும் 20ஆம் நாள் தொடக்கம், 23ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வரும், உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டுக்கு, சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மற்றும் அரசுத் தலைவர்களுக்கு மட்டும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
இம்முறை மாநாட்டுக்கு, பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்கள், பொருளாதாரத்துறையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட அனைத்துலக நிதி அமைப்புகளின் உயர் பிரதிநிதிகள் என சுமார் 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில், கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடேயூ, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஆகியோர் முக்கியமானவர்களாவர்.
சிறிலங்கா பிரதமருடன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் சுவிற்சர்லாந்து செல்லவுள்ளனர்.