கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சி சொன்ன மேஜர் ஜெனரலுக்கு பிணை
கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவை பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய அனுமதித்துள்ளார்.
ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முகாமையாளராகப் பணியாற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர, பாரிய மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்திருந்தார்.
அதிபர் தேர்தல் பரப்புரைக்கு ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவன பணியாளர்கள் பயன்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
அது பொய்யான சாட்சியம் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், கோத்தாபய ராஜபக்ச மீதுள்ள மதிப்பினால் அவரைக் காப்பாற்றவே பொய்ச்சாட்சியம் அளித்ததாக ஆணைக்குழு முன் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து. அவருக்கு எதிராக அதிபர் ஆணைக்குழுவினால் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணை செய்யப்பட்ட போதே, மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவை 10 ஆயிரம் ரூபா காசு மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டு தனிநபர் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளார்.