பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் சிறிலங்கா வருகிறார்
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அவர், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில், ஹியூகோ ஸ்வைர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
கடந்த ஒரு ஆண்டு காலத்துக்குள் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக பிரித்தானியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.