சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பம் – கொழும்பு வந்தார் ஹமீத் கர்சாய்
சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று பிற்பகல் கொழும்பு வந்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை கொழும்பில் உள்ள கலதாரி விடுதியில் ஆரம்பமாகவுள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் – ‘வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல் சூழலில் தேசிய பாதுகாப்பு’ என்ற தொனிப்பொருளில் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
34 நாடுகளைச் சேர்ந்த 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பாதுகாப்பு மாநாட்டில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் கலந்து கொள்ளவுள்ளார்.
தலிபான் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்தவர் ஹமீத் கர்சாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இராணுவத்தினால் நடத்தப்படும் ஐந்தாவது பாதுகாப்புக் கருத்தரங்கு இதுவாகும்.