எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிப்பது சபாநாயகர் தான் – லக்ஸ்மன் கிரியெல்ல
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்படவுள்ள லக்ஸ்மன் கிரியெல்ல, இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், ‘நாடாளுமன்ற நடைமுறைகளின் படி, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எந்த எதிர்க்கட்சி உறுப்பினரும் நிறுத்தப்படலாம். ஆனால், சபாநாயகரே இறுதியான முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் சூடு பிடித்துள்ளது.
நாளை காலையில் சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி, புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். அதையடுத்து உறுப்பினர்கள் பதவியேற்பு இடம்பெறும்.
நாளை பிற்பகலில் நடக்கும் அமர்வில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.