கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை, நிஷா பிஸ்வாலுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரும் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.
ஒன்றரை மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்கள், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவையும், நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.