காலை வாரியது அமெரிக்கா – ஜெனிவாவில் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதாக அறிவிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் வழங்க கோரும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.
இந்த தகவலை கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.
தனது இரண்டு நாள் பயணத்தின் முடிவில் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
‘ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் ஜெனிவாவில் வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் அமெரிக்க மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து முன்வைக்கும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அனைத்துலக சமூகத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளுக்குப் பதிலளிப்பதற்கு காலஅவகாசத்தைக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக கொண்டு வரும் தீர்மானம் கருத்தொருமித்த தீர்மானமாக அமையும்.
ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் தெரிய வந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடி அந்த தீர்மானம் வரையப்படும்.
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஜனவரியிலும், இந்த மாதமும் பதவிக்கு வந்த பின்னர் உள்நாட்டு விசாரணைகளின் மூலம் கரிசனைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தினேன். புதிய அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளுக்குப் பதிலளிப்பதற்கு, அதனுடன் இணைந்து பணியாற்றுமாறு அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.