எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கமாட்டார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கமாட்டார் என்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே பணியாற்றுவார் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தன்னுடன் இருக்கும் அரசியல் கட்சிகள், குழுக்களுக்கு மகிந்த ராஜபக்ச அரசியல் ரீதியாகத் தலைமை தாங்குவார்.
எனினும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கமாட்டார். சாதாரணமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே இருப்பார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டாம் என்று, மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கையானவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற அவைத் தலைவராக லக்ஸ்மன் கிரியெல்லவையும், பிரதம அரசாங்க கொரடாவாக கயந்த கருணாதிலகவையும் நியமிக்க ஐதேக முடிவு செய்துள்ளது.