கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் அறிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற துரைரட்ணசிங்கம் மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோரே தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கும், தோல்வியுற்ற வேட்பாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருந்து வந்தது.
எனினும், திருகோணமலை மாவட்டத்தில், இரா.சம்பந்தனுக்கு அடுத்து அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு சில நூறு வாக்குகளால் வெற்றிவாய்ப்பை இழந்தசாந்தி சிறீஸ்கந்தராஜாவும், இந்த இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவலை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார்.
சாந்தி சிறீஸ்கந்தராஜா சிறிலங்கா நிர்வாக சேவை அதிகாரியாக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஒருவர் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவின் ஒரே பெண் உறுப்பினராவார்.