தேர்தல் கண்காணிப்புப் பணியில் முதல்முறையாக ஐரோப்பிய இராஜதந்திரிகள்
சிறிலங்காவில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணியில், கொழும்பைத் தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளும் ஈடுபடவுள்ளனர்.
நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, சுமார் 180 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து, 20இற்கும் அதிகமான, கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளே இந்த கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
பிரித்தானியா, இத்தாலி, சுவீடன், ஹொலன்ட், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், கொழும்பில் தூதரகங்களைக் கொண்டுள்ளனர்.
இவற்றில் பணியாற்றும் இராஜதந்திரிகள் தேர்தல் கண்காணிப்பிலும் ஈடுபடவுள்ளனர்.
இராஜதந்திரிகள், வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கும், வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் சென்று அவதானிக்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரையறுக்கப்பட்ட பங்கையே ஆற்றுவார்கள், எந்த விவகாரத்திலும் தலையீடு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதனிடையே, இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பில் 180, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள், 20 வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் 20,000 உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர்.