சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இந்தியாவை முந்தியது சீனா
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இதுவரை முன்னணி வகித்து வந்த இந்தியாவை, முதல்முறையாக சீனா பின்தள்ளியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில் சீனர்களே முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
சிறிலங்கா சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலேயே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவுக்கு, 175,804 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இது கடந்த ஆண்டு அதே மாத்த்துடன் ஒப்பிடுகையில், 31 வீதம் அதிகமாகும்.
சீனாவில் இருந்து மட்டும், கடந்த ஜூலை மாதம், 25,120 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்திருந்தனர். இது கடந்த ஆண்டு அதே மாத்த்துடன் ஒப்பிடுகையில், 65.5 வீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும், 119,705 சீனர்கள் சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஜூலை மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை, 24,681 ஆகும். கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 28 வீத அதிகரிப்பாகும்.
அதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும், இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
170,134 இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களிலும் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.