மேலும்

சிறிலங்காவில் எல்லாத் தரப்புடனும் ஆலோசித்தே ஐ.நா உதவும் – பான் கீ மூனின் பேச்சாளர்

Stephane-Dujarricஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டில் பொறுப்புக்கூறுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கசிந்துள்ள ஆவணம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்,

“சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிறிலங்கா மக்களின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு ஐ.நா ஆதரவளிக்கிறது.

இதுதொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையில், தொழில்நுட்ப மற்றும் நிதி உதிவிகளை வழங்குவதற்கும், வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் அமைதி செயல்முறைகளை ஊக்குவிக்கவும், பரந்த உதவிப் பொதி ஒன்றை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுதல், தேசிய நல்லிணக்கம், மனித உரிமை பொறிமுறையை வலுப்படுத்தல், தண்டனைகளில் இருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வருதல் போன்றவற்றின் மூலம், சிறிலங்காவில் நல்லிணக்கச் செயல்முறைகளை முன்னேற்றவதற்கான, அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்குவது குறித்து இன்னமும் கலந்துரையாடப்படுகிறது.

ஐ.நாவின் உதவிகள் எப்போதுமே, எல்லாப் பங்காளர்களினதும், பங்கேற்பு ஆலோசனைகளையே அடிப்படையாக கொண்டவை.

எனக்குத் தெரிந்தவரையில், மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு. கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு மீளளிக்கப்பட்ட நிலங்களில் மக்களை மீள ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கு, ஆதரவு வழங்கும் வகையில், ஏற்கனவே 1 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் எல்லாப் பங்காளர்களுடனும், ஐ.நா உதவி தொடர்பாக நாம் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.

சிறிலங்காவில் நாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள். வெளிப்படையானதாகவும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் வடக்கு மாகாணசபையின் ஆதரவு பெற்றதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அனைத்துலக விசாரணை –  உள்நாட்டு அல்லது அனைத்துலக விசாரணையை வலியுறுத்தப் போகிறதா என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்காக காத்திருக்கிறோம். அதனைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *