தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் நிதியுதவி பெறவில்லை – என்கிறார் மகிந்த
தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து மகிந்த ராஜபக்ச நிதியுதவிகளை பெற்றுள்ளதாக, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பு வானொலி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,
“பல்வேறு அமைப்புகளின் ஊடாக ஐதேக மேற்கு நாடுகளில் இருந்து நிதியுதவிகளைப் பெற்று வருகிறது.
தயவு செய்து எனக்கும் பணம் கொடுக்குமாறு அவர்களிடம் கூறுங்கள்.
எவருடனும் நான் இரகசிய உடன்பாடு வைத்துக்கொள்ளவில்லை. எனது பரிமாற்றங்கள் அனைத்துமே வெளிப்படையானவையாகவே இருந்திருக்கின்றன.
நான் எப்போதுமே ஜனநாயகத்தின் பக்கம் தான் நிற்கிறேன். மேற்கு நாடுகள் ஜனநாயகம் குறித்து எனக்கு கற்பிக்க வேண்டிய தேவையில்லை.
வடக்கில் வாக்குகளைப் பெறத் தவறியதால் தான், கடந்த அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைய நேரிட்டது.
வடக்கில் தேர்தல் நடத்தினால் தோல்வியடைய நேரிடும் என்று தெரிந்து கொண்டே, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்கினேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், தமிழ் மக்களின் கவலைகளைத் தீர்க்கும் வகையில் அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவோம் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.