இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது பரப்புரைப் போர்
எதிர்வரும் 17ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள், கடுமையான பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தன.
இந்தப் பரப்புரைகள் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைகள் முடிவுக்கு வந்த பின்னர், அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, எந்த வகையிலான பரப்புரைகளையும் முன்னெடுக்க கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, முகநூல் உள்ளிட்ட சமூக வலையமைப்புகள், இணையத்தளங்கள் மூலமான பரப்புரைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முகநூலில் எந்தவொரு வேட்பாளரை அரசியல் கட்சியையோ வேட்பாளரையோ ஆதரித்தோ அல்லது, எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, வரும் 17ஆம் நாள் திங்கட்கிழமை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறும்.
காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.