புலிகளுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறார் சுசில்
விடுதலைப் புலிகளுக்குப் பயணம் கொடுத்தே அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார் என்று, ஐதேக தரப்பு கூறிய குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,
“பிரபாகரனுக்கு நாம் பணம் கொடுத்ததாகவும் பயங்கரவாதத்தை நாம் வளர்த்ததாகவும் எம்மீது குற்றம்சுமத்துகின்றனர்.
நாம் புலிகளுக்கு பணம் கொடுத்தேனும், அவர்களை இந்த நாட்டில் இருந்து முழுமையாக அழித்து விட்டோம்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் புலிகளுக்கு பணத்தை கொடுத்து விட்டு நாட்டையும் கொடுக்கவே முயற்சித்தனர்.
நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்து, வடக்கில் பிரிவினைவாதிகளின் நாட்டை பிரிக்கும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
எமது ஆட்சியில் வாய்மூடி செயற்பட்ட கூட்டமைப்பு பிரிவினைவாதிகள் இப்போது மீண்டும் தமது கொள்கையை முன்னெடுக்க ஆரம்பித்து விட்டனர். மீண்டும் தனி நாடு என்ற கொள்கையில் இயங்க ஆரம்பித்து விட்டனர்.
இந்தத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் அமையுமானால் இந்த நாட்டில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அதேபோல ரிசாத், ஹக்கீம் ஆகியோர் கேட்கும் கரையோர மாவட்டக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
இவை அனைத்தையும் தடுக்கும் நோக்கத்தில் நாட்டை காப்பாற்றவே நாம் மக்களின் ஆதரவை கேட்கின்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.