அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சிறிலங்காவில் பேச்சு
அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் பிராந்தியத்திற்கான, மூலோபாய மற்றும் திட்டங்களுக்கான பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் ஜே.எஸ். கொர்னேலியா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் கடந்த 21ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கு, சிறிலங்கா தரப்பு பாராட்டு தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் மேலும் ஒத்துழைப்புக்கான எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதுக்குழுவில் மேஜர் ஜெனரல் கொர்னேலியா மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் இந்திகா விஜேகுணவர்தன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் தொடர்பு அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

