ஒட்டாவாவில் உள்ள தூதரகத்திடம் விபரம் கோருகிறது வெளிவிவகார அமைச்சு
கனடாவின், பிராம்ப்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ள நிகழ்வு குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விபரங்களைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
2024 ஓகஸ்ட் மாதம் தொடக்கம் இந்த விவகாரத்தினால் கனடாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் இராஜதந்திர பதற்றம் நிலவி வருகிறது.
அப்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பிராம்ப்டன் நினைவுச்சின்ன அடிக்கல் நாட்டு விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கொழும்பில் உள்ள கனடிய தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து, கண்டித்திருந்தார்.
இதுதொடர்பாக, கனடிய உயர்நீதிமன்றத்தில், சிறிலங்கா அரசின் பின்புல ஆதரவுடன் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே சிறிலங்கா அரசின் எதிர்ப்பை மீறி பிராம்ப்டன் நகரில் அமைக்கப்பட்ட தமிழர் இனஅழிப்பு நினைவுத் தூபி திறப்பு விழா தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் விபரம் கோரப்பட்டுள்ளது.
