அமெரிக்கவின் பயண எச்சரிக்கை – தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்து கொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.
மற்றொரு பயங்கரவாத தாக்குதல் குறித்த வதந்தி முற்றிலும் தவறானது என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று தமது கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், அமெரிக்க தூதரகத்தின் இந்த பயண எச்சரிக்கை வழக்கமான ஒன்று தான் என குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்கா குறித்த எமது பாதுகாப்பு அறிவிப்பின் மீது ஊடகங்களும் மற்றவர்களும் கவனம் செலுத்துவதை நான் புரிந்து கொள்கிறேன்.
குறிப்பிடத்தக்க விடுமுறைகள் மற்றும் பெரிய பொது நிகழ்வு காலத்தில், நல்ல நடைமுறைகளைப் பற்றி, இங்கு பயணிக்கும் மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுவது வழக்கமானது” என்று அவர் அதில் கூறியுள்ளார்.