ஐதேக கூட்டணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு
புதிய கூட்டணியை உருவாக்கும் விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து, இன்று நடைபெறவிருந்த தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று சிறிகொத்தாவில் இந்த நிகழ்வு நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், இந்த நிகழ்வு – நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐதேக செயற்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, கட்சியின் முக்கிய தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதையடுத்தே, கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வைப் பிற்போடுவதற்கு அவர் முடிவு செய்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐதேகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் பங்காளிக் கட்சிகளும், ஐதேக முதலில் வேட்பாளர் தொடர்பான பிரச்சினையை தீர்த்து விட்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
அதேவேளை கூட்டணியில் இணையும் கட்சிகள் யாப்பில் திருத்தங்கள் செய்வதற்கு காலஅவகாசம் கோரியுள்ள நிலையிலேயே, இன்றைய நிகழ்வு பிற்போடப்பட்டதாக ஐதேக தரப்பில் கூறப்பட்டுள்ளது.