துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வடக்கில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அறிவிப்பு
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து வடக்கில் இன்று தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனைக் குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரது மெய்க்காவலர் உயிரிழந்தார். மற்றொரு சிறிலங்கா காவல்துறை காவலர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என்று தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டவாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண சட்டவாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.
நல்லூரில் நடைபெற்ற தாக்குதலில் உயிர் நீத்த காவல்துறை சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவு எம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தாருக்கு எமதுஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்து வருவதாக வட மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன். – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
அதேவேளை, இந்த போராட்டத்தில் மேலும் பல அமைப்புகளும் இணைந்து கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.