சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி – இந்திய தூதுவர்
சிறிலங்கா மக்களின் நலன் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தொடர்ந்தும் செயற்படுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள, யாழ். பல்கலைக்கழக பொறியியல் மற்றும் விவசாய பீடங்களுக்கான புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியாவின் 600 மில்லியன் ரூபா உதவியின் கீழ் கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதிகளை சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, மற்றும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோருடன் இணைந்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய தூதுவர், பொருளாதார அபிவிருத்திக்கு விவசாயத்துறையும் பொறியியல் துறையும் மிக முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.