மேலும்

அடிப்படை உரிமைகளை மீறிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா அபராதம்

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு உடன்பாட்டின் மூலம், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி,  அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக,  சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சிறிலங்கா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீது, இன்று தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, நீதியரசர் குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதியரசர் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய  அமர்வு, சுகாதார அமைச்சின் செயலாளர், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரும் அடிப்படை உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று தீர்ப்பளித்துள்ளது.

அந்தக் காலத்தில் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பதிவு விலக்கு “தவறானது, தன்னிச்சையானது மற்றும் மனம்போன போக்கானது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கேள்விப்பத்திரம் கோரப்படமல் நேரடி ஒப்பந்தம் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்தது சட்டவிரோதமானது என்றும், அந்தப் பரிவர்த்தனையை செல்லாதது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் 75 மில்லியன் ரூபாவும், ஏனைய ஒவ்வொரு பிரதிவாதியும் 50 மில்லியன் ரூபாவும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *