சிறிலங்கா அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றப்பத்திரம் கையளிப்பு
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இன்று குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அழைப்பாணைக்கு இணங்க, குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் குமார ஜயகொடி இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் குற்றச்சாட்டுகள் அடங்கிய பத்திரம் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் குமார ஜயகொடியை, தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பேரின் பிணையில், விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார ஜயகொடி 2016-ஆம் ஆண்டில் லங்கா உர நிறுவனத்தில் பணியாற்றியபோது, கொள்முதல் செயல்முறையின் போது ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
