ஒக்ரோபர் 15இல் பலாலி விமான நிலையம் திறப்பு – இன்றைய கூட்டத்தில் முடிவு
பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது. எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்த திறப்பு விழா நிகழ்வை அடுத்து. இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தில் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் ஒன்று இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன்,மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விமான நிலைய கட்டுமானப் பணிகள் 30 வீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளதாகவும், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
எனினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் வழங்கல்ஆதாரம் விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருப்பதால் நீர் வழங்கலைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த பிரச்சினையை தீர்க்க, கடற்படையின் உதவியுடன், கடல் நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
அதேவேளை, விமான நிலையத்தில் சுங்க, குடிவரவு செயலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.